About Me

சென்னை, தமிழ் நாடு, India
சொல்ல நிறைய இருக்கிறது.

Thursday, April 15, 2010

ஏயர் கோன் கலிக்காமனார் 2

தூதனும் சென்று கூற இறைவனை தூதனாய்
அனுப்பியவன் வந்து எனது நோயைத் தீர்ப்பானாகில் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது

இச்சூலையை வயிற்றோடு கிழிப்பேனென்று தனது உடைவாளை எடுத்து வயிற்றை கிழித்தார்.
சூலையும் தீர்ந்தது . உயிரும் தீர்ந்தது.

இதைக் கண்ட அவருடைய மனைவியாரும் கணவரோடே சிவபதவி அடைய வேண்டுமென்று தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது ஒருவர் வந்து திரு நம்பியாரூரர் வருகிறார் என்ற செய்தி கேட்டு உடனே அவர் சிறந்த அடியார் வரும் போது அழுவது முறையோ என்று தனது கணவரின் உடலை மறைத்து வைக்க ஏற்பாடு செய்தார்.

அப்பர் எனும் திருநாவுக்கரசர் வரும்போது மாண்ட தன் மகனை மறைத்து வைதத அப்பூதியடிகளும் அவர்தம் மனைவியும் செய்தது போலவே இங்கும் இவரும் செய்கிறார்.

உடனே அவரை வரவேற்பதற்காக‌பரிசனங்களை அனுப்பினார். வீடு முழுதும் மாவிலை தோரணம் கட்ட முறையாக பரிசனங்களும் நம்பியாரூரைவரவேற்றார்கள்

. உள்ளே புகுந்ததும் அவர் அமர்வதற்கு சிறந்த ஆசனமிட அவரும் அமர்ந்தார். முக மலர்ந்தார்.அவரதுபாதத்தை விளக்கி அருச்சனை செய்தனர்.

உடனே சுந்தரரோ " எங்கே கலிக்காமர் அவரது சூலை நோய் தீர்த்து அவரோடு இருந்து விட்டு போகலாமென்றுதான்
வந்தேன்."என்றார்

அவருக்கு தீஙகு எதுவும் இல்லை நன்றாக உறங்குகிறார். என்றனர். சுந்தரரும் விடுவதாக‌ இல்லை. ஏனென்றால் இத்தனை நாள் மனமுருகி இறைவனிடம் பிரார்த்தித்து அல்லவோ
அவரைக் காண வந்திருக்கின்றார்.

தீங்கு ஏதுமில்லையென்றாலும் பரவாயில்லை.
அவர் உறங்கிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை.அவரைக் காண வேண்டும். என்றார். வேறு வழியில்லாது உள்ளே சென்று காட்டியதும் சுந்தரர் துடித்துப் போய்விட்டார்
."ஆ என்ன இது இவரைக் கண்டு இவரது சூலையை தீர்க்கவே நான் வந்தேன். இனி நானும் உயிரோடு இருந்து என்ன பயன் . நானும் மாள்வேன்" என்று சொல்லி உடைவாளைப் பற்றினார்.அப்போது அஙகுள்ளோர் எல்லாம் காணும் வண்ணம் ஒரு அதிச‌ய்ம் நிகழ்ந்தது .

கலிக்காமனார் எழுந்து "ஆஹா கேளிரைக் காணப் பெற்றேன் "என்று ஆரூரரைத் தடுத்து உடைவாளைப் பற்றினார். ஆருரர் மண்மீது விழுந்து கலிக்காமரை வணங்கினார்

பின் இருவரும் ஆரத் தழுவினர். இக்காட்சியை அங்குள்ளோரெல்லாம் காணப் பெற்றனர்.

பிறகு அருகிலுள்ள திருப்புன்கூர் தலத்திற்குச் சென்று இறைவனை தொழுது பாடினர். சுந்தரரோ அங்குதான் "அந்தணாலின்"என்று தொடங்கும் திருப் பதிகத்தைப் பாடினார்.

சில நாட்கள் திருப்பெருமங்கலக்குடியில் தங்கியிருந்து பின் திருவாரூர் கிளம்பினார். உடன் கலிக்காமனாரும் அவருடன் அங்கு சென்று அங்கிருக்கும் இறைவனை வழிபட்டனர்.

சிலகாலம் அங்கேயே சுந்தரருடன் தங்கியிருந்து மீண்டும் திருப்பெருமங்கலக்குடியில் வந்தார். இறைவனுக்கு பல்லாண்டுகள் தொண்டுகள் செய்து பின் இறைவனைச் சேர்ந்தார்.
இறைவனை வழிபடும் அடியார்கள் பலவிதமாக் இருந்திருக்கின்றனர். இறைவனை பாவிக்கும் விதமே
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி இருந்தது.சிலர் இறைவனைத் தனது தோழனாகவே பாவிப்பர்.
{சுந்தரர்}.
சிலர் இறைவனாகவே பாவிப்பதுண்டு. கலிக்காமனார் போன்ற பெரும்பாலானோர் இப்படித்தான்
சிலர் இறைவனை குருவாக நினைத்து வழிபடுவ்ர். சிலர் தந்தையாக எண்ணுவர்.சிலர் இறைவனிடம்
தாசனாகவே இருப்பதுண்டு. ஒவ்வொருவரின் பாவம் ஒவ்வொரு முறையாக இருத்தலால் அதனைப் புரிந்து
கொள்ளவும் இயலாது.

ஏயர் கோன் கலிக்காமனார் 1

ஏயர் கோன் கலிக்காமனார்

காவிரி நதியின் வடகரையில் திருப்பெருமங்கலக்குடிஎன்ற ஊரில்
சோழமன்னர்களிடம் பரம்பரையாக சேனாதிபதித் தொழில் செய்த ஏயர் குடியில் கலிக்காமர் என்னும் அடியார் வாழ்ந்து வந்தார். இவர் வாழ்ந்த காலமும் திருவாரூரர் என்னும் சுந்தரர் வாழ்ந்த காலமும் ஒன்றேயாகும்
.
இளமை முதல் அருகிலுள்ள‌ . நந்தனாருக்காக வழி விட்டு விலகிய நந்தீச்வரர் உள்ள கோயிலாகிய திருப் புன்கூர் என்ற திருத்தலத்தில் சென்று தினமும் வழிபட்டு எம்பெருமானுக்கு சேவை செய்வது வழக்கமாக கொண்டிருந்தார் .

புன்க மரத்தின் கீழ் இறைவன் இருந்தமையால் இதற்கு திருப் புன்கூர் என்ற பெயர்ஏற்பட்டது.

இது வைத்தீச்வரன் கோவிலுக்கு அருகில் உள்ள தலமாகும்.

திருவாரூரில் நம்பியாரூரர் என்னும்
சுந்தரமூர்த்தி நாயனார் சிவனையே பரவையார் பால் இரவில் தூது அனுப்பிய செய்தி கலிக்காம நாயனார் கேள்விப் பட்டு மனம் வேதனையுற்றார்.

" ஆ என்ன புதுமை இது எங்கும் கேள்விப்படாததாயிருக்கினறதே
தேவரும் மூவரும் காணாத இறைவனை ஒரு பெண்ணிடம் போய் தூதனுப்புவதா? தகாத செயலைச்செய்த இவன் எப்படி ஒரு தொண்டனாவான்?

.இதைக் கேட்டும் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேனே ஒரு நாளிரவு முழுவதும் இறைவன் மலரடி நோவ உழன்றாராமே

கடவுள் இந்த காரியம் செய்ய ஒத்துக் கொண்டாலும் இவர் எப்படி ஏவலாம். அவரை நான் காண நேர்ந்தால் என்ன நடக்கும் என்று எனக்கும் தெரியவில்லையே"



“ நாயனை அடியான் ஏவுங்காரியம் நன்றுசால்
ஏயும் என்றிதனைச் செய்வான் தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்கவொண்ணா பிழையினைச் செவியிற்கேட்ப‌
தாயினபின்னும் மாயாதிருந்த‌தென் ஆவி என்பார் ”

கலிக்காமரின் கோபம் அறிந்து சுந்தரரோ மிகவும் மனம் வேதனையுற்றார். ஒரு சிறந்த அடியார் என்மீது சினமாய் இருப்பதா?
அப்படி கூடாதே . அவர் சினம் தணிந்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நான் என்று தெரியவில்லையே " என்று அவர் தினமும் இறைவன் முன் பிரார்த்தனை
செய்யலானார்.


இறைவனே எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் கதி ? நீதான் எனக்கு ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும் என நாளும் இறைவனை நினைத்து உருகி வேண்டலானார்.

ஒரு நல்ல அடியாரின் திரு உள்ளத்தில் என்னைப் பற்றி ஒரு மாறுபட்ட கருத்து இருக்கலாமோ என்றெல்லாம் விண்ணப் பிக்கின்றார்


இறைவனும் இவர்கள் இருவரின் பிணக்கைத் தீர்க்க திருவுள்ளம் கொண்டார்.
திருநாவுக்கரசருக்கேற்பட்டது போன்ற சூலை என்னும் கொடிய நோய் வயிற்றில் ஏற்பட்டது. கலிக்காமனாருக்கு தாங்கமுடியாது கீழே விழுந்து புரண்டார். இறைவா என்று சிந்தித்து வந்திப்பார்.

கலிக்காமனாரின் முன் இறைவன் தோன்றி அன்பரே உனது சூலை நோயைத் தீர்க்க சுந்தரர் ஒருவராலேயே முடியும் . அவராலேயன்றி வேறெவராலும் முடியாது என்கிறார்
"
எம்பிரான் எந்தை தந்தை தந்தைதன் கூட்டமெல்லாம்
தம்பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்றிடுஞ் சூலை
வம்பென ஆண்டுகொண்டான் ஒருவனோ தீர்ப்பான் வந்து."

நானோ பழைய அடியவன் புதிய அடியவன் வந்துதான் என் சூலை நோயைத் தீர்ப்பானெனில் தீராமலே இருந்து விடட்டும் என்று சொல்ல இறைவன் சென்று விடுகின்றார்.

இங்கே இறைவன் சொல்லியும் கேட்கவில்லை அவர். ஏன்.?அவருக்கு அத்துணை பக்தி அவர்மீது

இறைவன் எப்படிப் பட்டவன் மாலயன் இருவரும் தேடியும் கிடைக்க வொண்ணாத வனை சாதாரண‌மாக ஒரு பெண்ணிற்க்காக தூதனுப்புவ்தா என்ற கோபம்


ஆரூரரிடம் சென்று இறைவன் கூற அவரும் உடனே தான் அங்கு அவரது சூலை நோயைத் தீர்க்க வருவதாக ஒரு தூதுவனிடம் சொல்லி அனுப்பினார்.

Sunday, April 11, 2010

குங்கிலிய கலய நாயனார் 2

திருபனந்தாள் என்ற திருத்தலத்தில் உள்ள சிவலிங்கமானது சாய்ந்திருந்தது.

லிங்கமானது வளைந்ததற்கான காரணம் ஒருமுறை திருப்பனந்தாளில் தாடகை என்ற அம்மை இறைவனை வழிபடும்போது திருமஞ்சனக் குடமெடுத்து இறைவன் திருவடி மேல் விடுவதற்கு தூக்கிய போது சீலை அவிழ்ந்துவிட்டது.

அவிழ்ந்த சீலையை முழங்கையால் தகைந்து திருமுடியெட்டாமல் வருந்திய போது இறைவர் திருமுடி சாய்த்தார் என்று சொல்லப்படுகின்றது அன்று முதல் சிவலிங்கம் வளைந்தே இருந்தது சோழ மன்னன்
எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

அந்த லிங்கத்தை கயிற்றால் கட்டி வலிமையாக இழுத்துப் பார்த்தும் நேராக்க முடியவில்லை. அந்த ஊர் அரசனோ யானை ,சேனைகள் கொண்டு இழுத்து அப்போதும் முடியாமல் சோர்ந்து விட்டர்ர்.அந்த சமயம் நம் குங்கிலிய கலய நாயனாரோ திருப்பனந்தாளுக்கு இடைப்பட்ட ஒவ்வொரு திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக இங்கு வருகிறார்

இவரும் இதைக் கேள்வியுற்று நம் கலயனாரும் அந்த வருத்தத்தில் பங்கு எடுத்துக் கொள்ளவே
முயன்றார். கழுத்தில் கயிற்றை மாட்டி இழுக்க முயற்சிக்க லிங்கமானது நேராகி விட்டது.

"நண்ணிய ஒருமை யன்பின் நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி யிளைத்தபின் திறம்பி நிற்க‌
ஒண்ணுமோ கலய னார்தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்னணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்".

அன்பெனும் நார் கொண்ட கயிற்றினால் நம் அன்பர் இழுத்தும் கூட சாய்ந்து நிற்பாரோ
இறைவன்.சிவலிங்கம் நேரானது கண்டு உடனே அங்கிருந்த அரசர் பெருமான்
நம் கலய நாயனாரின் திருவடி மீது நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்தான். வணங்கினான்.

பின்பு சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய திருப்பணிகளை எல்லாம் ஒழுங்காக
ஆற்றி விட்டு சென்றான்.

கலயனாரும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து இறைவனை பலகாலும்
வழிபட்டு பின் திருக்கடவூர் வந்து சேர்ந்து மீண்டும் அங்கு திருப்பணிகள் செய்யலானார்.

அப்போது சம்பந்த‌ரும்,திரு நாவுக்கரசரும் அங்கு ஒன்றாக சேர்ந்து அடியவர் கூட்டம்
பின் தொடர திருக்கடவூர் வந்து சேர்ந்தனர். நம் நாயனாரோ மிகவும் களிப்புடன் அவர்களை
வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்து அறுசுவை உண்டி அளித்து அனுப்பி வைத்தார்.

பின்னும் சிலகாலம் காலனை காலால் உதைத்த எம்பெருமானுக்கு சிறப்பாக திருத்தொண்டினைப் புரிந்து பின் சிவபதமெய்தினார்.

Tuesday, April 6, 2010

குங்கிலிய கலய நாயனார் 1

எத்தனையொ மகான்கள் இந்த உலகில்
அததனை பேருக்கும் என் வணக்கங்கள்……

பாடம்:

நம் வாழ்வில் இறைவனுக்கு எந்த இடத்தை த்ந்திருக்கின்றோம் என்று பார்க்க
வேண்டும்.மனைவி ,மக்கள்,சுற்றம், நண்பர்கள், காதலர்,வியாபாரம்
என்று எல்லாவற்றிற்கும் முதலிடம் ,இரண்டாமிடம் என்று தந்து விட்டு நம்மையும்
இந்த உலகையும் படைத்த இறைவனுக்கு ஆறாவது பத்தாவது இடத்தைத் தருகின்றோம்.

எப்போது நாம் இறைவனுககு முதலிடத்தைத் தருகின்றோமோ
அப்போது நாம் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.இனறு உலகில் எல்லோரும் எதற்காக இப்படி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பய்ம்தான்

.தனக்காகவும் தன் எதிர் கால்த்திற்காகவும் தன் பிள்ளைகளின் எதிர்
காலத்திற்காகவும் சேர்க்கத்தான் இத்தனை ஓட்டம்.

ஆனால் அந்த காலத்திலும் சரி , இந்தகாலத்திலும் சரி இறைவனின் அடியார்கள் எதற்கும் பயப்படுவதில்லை.

அவர்களுக்கு பயமே இல்லை. ஏனென்றால் அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான் என்று அவனையே சதா சர்வ காலமும் சிந்தித்தவண்ணமே இருப்பார்கள்.

அந்த தூய்மையான இறைவனுக்குத் தான் தன் வாழ்க்கையில் முதலிடத்தை தருவார்கள்



திருக்கடவூர் என்ற ஊர். மிகவும் பெயர் பெற்றது. ஈசன்
பாலனுக்கு பரிந்து காலனையே காலால் உதைத்த இடம்

அந்த புனித ஊரில் எப்போதும் இறைவனையே நினைத்து உருகும் ஒரு
பிராமண குலத்தில் உதித்தவர் தான் நம் குலயனார் என்னும் அடியார்.

மிகவும் ஒழுக்கமுடையவர். தினமும் தவறாது திருக்கோவிலுக்கு சென்று
குங்கிலியம் என்னும் தூபமிட்டு திருத்தொண் டை செய்வது வழக்கம்.

வீடு நிலம் ஏதாவது இழந்தால் நம்மில் சிலர் இறைவனையே தூற்ற
ஆரம்பித்து விடுவோம். அந்த இறைவனுக்கு கண்ணில்லையா?
இதெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றானே என்று புலம்புவது வழக்கம்.



அடியார்களுக்கெல்லாம் விருந்து சமைத்து வழங்கி
மனைவி சுற்றமுடன் நன்றாக வாழ்ந்துகொண்டிருந்தார். திடீரென்று வறுமை என்னும்
கொடுமை தாக்கியது.வறுமை வந்தது .கூடவே பொறுமையும் வந்தது. மிகவும் அழகான நிலங்களை எல்லாம் விற்கத்தொடங்கினர். அப்போதும் தாங்கமுடியவில்லை.
என்ன செய்வது? எல்லாவற்றையும் விற்றாகிவிட்டது.

பசியின் கொடுமைதான் ஒன்றிருக்கின்றதே.எத்தனை நாட்கள் தான் பசியுடன் இருப்பது ஒரு நாள் இரண்டு நாள் என்று இருந்து பார்த்தார்கள். நாம் பசியுடன் இருந்தாலும் பரவாயில்லை. குழந்தைகள் , சுற்றம் என்ன செய்வார்கள்..

ஒரு நாள் அதிகாலை அன்பே வடிவாகிய அந்த அம்மையார் கடைசியாக தன் கழுத்திலிருந்த தாலியை கழற்றி அவரிடம் தந்துஅதை வைத்து நெல் வாங்கிவரும்படி கூறினார்.

கலயனாரும் அதைப் பெற்றுக் கொண்டு நெல் வாங்கலாமென்று செல்கின்றார்.செல்லும் வழியில் ஒரு வணிகன் பொதியை சுமந்த படி எதிரே வருகினறான். அவனைப் பார்த்து கலயனாரோ அது என்ன பொதி என்று கேட்கிறார். அந்த வணிகனோ அது குங்கிலியம் என்று கூறுகிறான்.

உடனே அவ்வளவுதான். "ஆஹா குங்கிலியம் இருந்தால் தினமும் இறைவனுக்கு தூபமிட்டு பணி செய்யலாமே "என்று அவருக்கு தோன்றுகின்றது. கையிலிருந்த தங்கத் தாலியை த்ருகின்றேன் .அந்த குங்கிலியத்தை தருகிறாயா என்று கேட்கிறார். அவனும் சம்மதிக்க அதைப் பெற்றுக் கொண்டு நேரே திருக்கோவிலுக்கு செல்கிறார்.

அங்கு இறைவனைக் கண்டு உருகி உருகி வழிபாடு செய்தார்.
அதே சமயம் அவரது வீட்டில் பொன்னும் மணியும் நெல்லும் குவிந்து கிடந்தது.
என்னே இறைவன் செயல். இது நடக்குமா என்று சந்தேகிக்கலாம்.
காலை வேளையில் சமையலறைக்கு சென்று கணவனுக்கும் குழந்தைகளுக்கும் சமைக்க
ஆரம்பித்தார் அவரது மனைவியார். நம் கலியனாரோ பசி ஏதுமின்றி இங்கு இறைவனையே
பார்த்து உருகி உருகி குங்கிலிய தூபமிட்டுக்கொண்டிருந்தார். அப்போது இறைவன் அவர் முன்
தோன்றி நீ மிகவும் பசியுடனிருக்கின்றாய். வீட்டிற்குச் ச்சென்று பால்ன்னம் உண்டு பசி தீர்த்துக்
கொள்வாயாக! என்றார். வீட்டிலே ஏது சாப்பாடு? என்றெல்லாம் யோசிக்கவே இல்லை.
இறைவன் கூறிவிட்டார். அவ்வளவுதான் அவருக்குத் தெரியும். நாயனாரோ ஒன்றும் புரியாது
பயந்த படியேவீட்டிற்கு சென்று விட்டார். உள்ளே நுழைந்ததும் அந்த குவியலைப் பார்க்க
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இவை யெல்லாம்எப்படி வந்தன என்று மனைவியிடம்
கேடக இதெல்லாம் அரனார் தந்தது என்று மனைவி கூற "ஆஹா என்னையும் ஒரு பொருட்டாக
எண்ணி பொருட்டாக ஆட்கொண்டனையே "என்று குதூகலமடைந்து கைகூப்பி நின்றார்.சிவனடியார்களை எல்லாம்
அழைத்து விருந்து அளிக்கின்றார்.
நிறைய தான தர்மங்கள் செய்கின்றார். அடியார்களை அழைத்து அன்னம், தயிர், கறி, பால்,நெய்
என்று அவர் பசி தீர்க்கின்றார். இப்படியே அன்னமிட்டு , இறைவனை வணங்கி வருகின்றார்.

தொடரும்

Saturday, January 16, 2010

கண்ணப்ப நாயனார் 2

“இறைவா புலியும் சிங்கமும்,கரடியும் யானையும் அலையும் இடத்திலே இப்படி தனியாக இருக்கிறாயே ? ஐயோ எப்படி நான் உங்களை விட்டு பிரிந்து போவேன்? உனக்கு இறைச்சி கொண்டு வருபவரும் யாருமில்லையே ? இனிமேல் தினமும் நான் இறைச்சி தருகிறேன் “என்று யோசிப்பார். பிரிவார்.

திரும்பவும் சென்று கட்டித் தழுவுவார் ஒரு பசுவினை விட்டு பிரியும் கன்றுக் குட்டியைப் போல் தவிப்பார். மிகவும் கஷ்டப்பட்டு மலையை விட்டு இறங்குவார் பொன் முதலி ஆற்றை கடந்தார்.

அங்கே காடன் ‘ஏன் இத்தனை நேரம்’ என்று கேட்க அதற்கு நாணன் குடுமிதேவரை கண்டதும் உடும்பைப் போலே கட்டி அணைத்துக் கொண்டான். திண்ணன்.

அவருக்கு தின்ன இறைச்சி கொடுக்கவே வந்துள்ளான் . நமது குலத்தன்மையை விட்டு விட்டான் அந்த தேவனுக்கே அடிமையாகி விட்டான்.

காடனும் "என்ன காரியம் செய்தாய்? என்று வினவ திண்ணனோ இதையெல்லாம் கவனிக்காமல் பன்றியை தீயில் வதக்கி சுட்டு பதமாக்கி சுவை பார்த்து அதிலும் நல்ல‌சுவையானவறறை எடுத்து வைத்தான்.மற்றதை எல்லாம் கீழே எறிகின்றான்
நல்ல பசியிருந்தும் அவனும் தின்னாமல் நமக்கும் கொடுக்காமல் இப்படி கீழே எறிகின்றானே என்று இருவரும் மிகவும் வருத்தப்பட்டார்கள்
. இவன் ஏதோ மயக்கத்தில் இருக்கிறான். இவன் தந்தை நாகனிடம் போய் சொலலி அழைத்து வருவோம். என்று சென்றனர்.

ஊனமுதை எடுத்து கொண்டு ஆற்றில் நல்ல நீரை வாயில் எடுத்துக் கொண்டு மலர்களை கொய்து தலைமயிரில் செருகி விரைவுடன் மலை ஏறினார்.

ஏற்கெனவே இருந்த மலரை மாற்றி வாயில் இருந்த நீரை உமிழ்ந்தார். தலையிலிருந்த மலர்களை வைத்தார். சுவை பார்த்து கொண்டு வ்ந்த இறைச்சியை உண்பதற்கு வைத்தார்/கொடிய விலங்கினால் துன்பம் நேராமல் இருக்க காவல் காத்தார்.பின்பு விடிந்ததும் சென்றார். மறு நாள் சிவாகம நெறிப்படி காளத்தியப்பரை வழிபாடு செய்யும்சிவ கோச்சாரியார் நீராடி நீர் , அமுது, மலர் கொண்டு வந்து இறைச்சியும் எலும்பும் கண்டு நடு நடுங்கி ஓடினார். என்ன இது? யார் இப்படி செய்தனர்? என்று எல்லாவற்றையும் அ கற்றி ஆற்றிற்கு சென்று குளித்து விட்டு வந்தார். மீண்டும் பூஜை செய்துவிட்டு விடை பெற்றார். திண்ணனோ மறு நாள் மீண்டும் இறைச்சி கொண்டு வந்தார்.ஐயனே இது நேற்றையதை விட இன்னும் சுவையானது. உண்பாயாக.என்று வேண்டுகிறார்.

இப்படியாக பகலில் வேட்டையாடி இர வில் காவல் காத்து வர சிவகோசாரியரோ அவர் சென்ற பின்பு வந்து சுத்தப்படுத்தி அபிஷேகம் செய்வார். நாகனும் தேவராட்டியும் இதையறிந்து மிகவருந்தி அவரைக் காண காளத்தி வருகிறார்.திண்ணன் இவையெல்லாம் கவனிக்கவே இல்லை. நான்கைந்து நாட்கள் இப்படி சென்றன. உண்மையிலேயே திண்ணன் அந்த இறை மயக்கத்திலேயே இருந்த்தனால் கவனிக்கவே இல்லை. மிகவும் வருத்திய சிவகோச்சாரியார் கனவில் சிவபெருமான் தோன்றி "என்னை வந்துபூசிப்பவன் சாதாரண வேடன் அல்ல. அவன் வடிவே அன்பு மயம் அவன் செயலே எனக்கு இனிமை" ":அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையரியும் அறிவென்றும் அவனுடைய செயலெ ல்லாம் நமக்கினியவாம் என்றும் " என்கிறார். மேலும் இறைவன் சொல்கிறார். அவன் வாயிலிருந்து உமிழும் உமிழ் நீரானது கங்கை நீரினும் புனிதமானது நாளை ஒருபுறமாக நின்று நடப்பதை கவனி என்று சொல்லி மறைந்தார். சிவகோசரியார் கோவிலில் பின்புறம் ஒளிந்திருக்க திண்ணன் வரும்போடு சிலையிலிருந்து ஒரு கண்ணிலிருந்து உதிரம் வழியத்தொடங் கியது. திண்ணனோ இதைக கண்டதும் ஐயோ என்று அலறி கீழே மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.வாயிலிருந்த நீர் கீழே சிந்த மலர்களோ சிதறின. சிறிது நேரம் கழித்து மீண்டும் கண் விழித்து எழுந்ததும் உதிரத்தைக் கண்டார். பிறகு அதை துடைத்து விட்டார். துடைக்க துடைக்க உதிரமானது வழிந்துக் கொண்டே இருந்த்து. பிறகு கோபம் வந்து வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு "யாரிதைச் செய்தது? புலியோ,அன்றி சிங்கமோ அல்லது வேறு யாரேனும் வேடரோ ? என்று வெளியே சென்று பார்த்து மீண்டும் வந்து ஐயோ என் செய்வேன்? எப்படி இந்த் உதிரத்தை நிறுத்துவது? என்று அவரது பாதத்தில் வீழ்ந்தார்.கண்ணீர் விட்டார். காட்டிற்க்குள் ஓடிச் சென்று மருந்து மூலிகைகளை கொண்டு வந்து பிழிந்தார். "ஊணுக்கு ஊண் உற்ற நோய் தீரும் என்ற பழமொழி நினைவுக்கு வர "எனது கண்ணை அப்பினால் என் தந்தையின் கண்ணிலிருந்து வழியும் உதிரமானது நிற்கும் என்று நினைத்து வேகமாக எதைப் பற்றியும் யோசியாமல் வில்லை எடுத்து தனது வலது கண்ணை தோண்டி எடுத்துஅப்பினார். குருதியும் நின்றது.அதை இன்னொரு கண்ணின் மூலமாக‌ கண்டார். உடனே குதித்தார். கூத்தாடினார். அன்பின் மிகுதியால் தன் கண்ணின் வலிகூட தெரியாமல் அப்படியொரு ஆனந்தப் பட்டார்.: உடனே இறைவனின் மறு கண்ணிலிருந்தும் குருதி உதிரத் தொடங்கியது. இம்முறை அவர் கவலைக் கொள்ளவில்லை.
அவருக்குத்தான் வழி தெரிந்து விட்டதே? இன்னொரு கண்தான் இருக்கிறதே அதைக் கொடுத்தால் உதிரம் நிற்குமல்லவா?என்று நினைத்தார். பிறகு அடடா நமது கண்ணை எடுத்ததும் இறைவனின் கண் இருக்குமிடம் நம‌க்கு தெரியாமல்போய் விடுமே என்று நினைத்து தனது இடது காலை எடுத்து இறைவனின் கண்மீது வைத்தபடி கணையை எடுத்து தனது இனனொரு கண்ணையும் குத்தப் போகும் போது " நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப"என்று கூறி இறைவன் தடுத்தாட்கொண்டார்.
எனது வலது புறத்தில் என்றென்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பாய் என்றார். . இத்தனையும் ஒளிந்திருந்தபடி சிவகோசாரியார் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தார்.


====================================================================================
இது இறைவன் சிவகோச்சாரியாருக்காக மட்டும் நடத்திய நாடகமா? அல்லது மக்களுக்காகவா? என்று யாருக்குத் தெரியும் ? . ஆனாலும் காலம் கடந்து நிற்கும் இந்த கதையை நாம் அடிக்கடி நினைவு கொள்வது அவசியம் . ஏனெனில் அப்பர், சுந்தரர் ,திருஞான சம்மந்தர் ,மாணிக்கவாசகர் காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் நடந்தது.அவர்களெல்லோரும் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடியுள்ளனரென்றால் எத்தகு பெருமை வாய்ந்தவர் அவர்

அவர் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்திருப்பவர்கள் எத்துணை பாக்கியம் செய்தவர்கள். என் நண்பர் ஒருவருடன் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் தியானம் செய்வோம்.. அப்போது அவர் சொல்லுவார்.
”இங்கே பாருங்கள். இத்தனை பெரிய கடலின் உள்ளே எத்தனை பிரம்மாண்டங்கள் உள்ளன ? அதன் இந்த அமைதியான தோற்றத்தை பார்க்கும் போதும், அதற்கு முன் அமர்ந்திருக்கும்போதும் இவ்வளவு பிரம்மாண்டமான இந்த கடலின் முன்னே நாமெல்லாம் எந்த மூலைக்கு?ஆனால் நமது அகங்காரம் எந்த அளவிற்கு இருக்கிறது இல்லையா ? ” என்பார். அதுபோல் நிறைய சமயங்களில் நமக்கு பக்தி மிகவும் அதிகம் என்று எண்ணும் போது நாம் கண்ண‌ப்ப நாயனாரை நினைவு கூர்வது நல்லது. என்னிடம் ஜாதகம் கொண்டு வருபவரிடம் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர்களின் ஜாதகத்தை பார்த்ததும் நான் சில சமயம் கோவிலுக்கு விடாமல் செல்லுங்கள் அவரை வழிபடுவதொன்றே வழி என்று சொல்வது வ்ழக்கம். அப்படி ஒருவர் மிகவும் துன்பத்தில் வந்திருந்தார் அவரிடம் சொல்லும் போது அதற்கு அவர் “ நான் நிறைய கோவிலுக்கு செய்திருக்கிறேன். எனக்கு பக்தி மிகவும் அதிகம். ஆனால் அந்த கடவுள் ஏன் தானோ இப்படி சோதிக்கிறான் ” .என்றார். நான் சொன்னேன் கண்ணப்ப நாயனார் கண்ணைப் பிடுங்கிக் கொடுத்தார். அப்படி ஏதாவது நீங்கள் செய்தீர்களா என்ன? என்றேன்.

ஏதோ நமக்கு தெரிந்த நாலு ஸ்லோகங்களையும் நாலு பாடலையும் தெரிந்து கொண்டால் நாம் கடவுளுக்கு நெருக்கமாகவோ சொந்தமாகவோ ஆகி விடமுடியுமா? என்ன?

என்றைக்குமே இறைவனை நெருங்கவே முடியாது. இறைவன் மிகப் பெரியவன் என்ற நினைவு நமக்கு எப்போதுமே இருக்கவேண்டும்.பக்தியில் நமக்கு அகங்காரம் வந்தால் நாம் உடனே இவரை த் தான் நினைவு கொள்ள வேண்டும்.

தூரத்திற்கு தூரமும் அவனே
நெருக்கத்திற்கு நெருக்கமும் அவனே

. ...................சந்திப்போம்

Friday, January 15, 2010

கண்ணப்ப நாயனார் 1

வேடுவனுக்குத் தலைவனவன்
வேதனையில் தானிருந்தான்
காடுமலை சுற்றி வந்து
யானைபுலிக் குட்டியுடன்
ஓடி விளையாடல் காண
ஓர் பிள்ளை யில்லையென்று
நீடு தவம் முற்பிறவி செய்த பலன்
நின்றே யின்று பெற்றனன்‍‍‍‍‍.....

என்று இப்படித்தான் எழுதிகொண்டு போக ஆசை.ஆனாலும் எதுகையிலும் மோனையிலும் எண்ணத்தை சிதற விட்டு, பக்தி இங்கு சிறகடித்துப் போய் விடுமோ என்ற பயம்.

வெண்பா பாடலாம் குழுவினரிடம் சற்று பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து நேரிசை வெண்பாவிலும் இன்னிசை வெண்பாவிலும் விளையாடலாம்..அது வரை எளிய தமிழில்
பக்தி ரசம் பருக என்னோடு வாருங்கள்.
************************************************************************

நாடு பொத்தப்பி
நாகன் தந்தை
தாயோ தத்தை

பிள்ளையொன்று இல்லையென்று எல்லோருங் கூறிட , முருகனை வழிபட்டு தவமாய் தவ‌மிருந்து பெற்ற பிள்ளைதான் திண்ணப்பன். புலிக்குட்டி, முயற்குட்டி, பன்றிக்குட்டிகளுடன் விளையாடி வளர்ந்தான்.

இளமைப் பருவம் வந்தது.வயதோ பதினாறு. தந்தை நாகனோ வில்விழா ஏற்பாடு செய்து மலைப்பகுதி மறவர்கள் சுற்றத்தாரை வரச் செய்து வில்லைப் பிடிக்கசெய்தான். திண்ணனை தலைவனாக்கி தான் ஓய்வு கொண்டான்.


இந்த இடத்தில் ஒரு முக்கிய செய்தி.
சிலர் அறியாத செய்தியாகவும் இருக்கலாம்.
இந்த திண்ணப்பன் தான் முற்பிறப்பில் அர்ஜுனன்.
மகன் அபிமன்யு பதிமூன்றாம் நாளன்று போரில் மாள, மிகவருந்தி, பாசு பதம் வேண்டி சிவபெருமானை நோக்கி
தவம்புரிய, நேரில் இறைவனை கண்டதும் கணையைப்
பற்றிக் கேட்காமல், அன்பெனும் அமைதியைத் தருமாறு
கேட்கலானான்.
அதற்கு இறைவனோ முதலில் பாசுபதத்தை பெற்றுக் கொள்.அளவற்கரிய அன்பையும்,முக்தியையும் அடுத்த பிறவியில் தருவோம் என்றார்.
பன்றியின் காரணமாக உனக்கும் எனக்கும் போர் மூண்டதால் அதே பன்றியின் காரணமாக நீ வந்து என்னைக் கண்டு அருள் பெறுவாய்.என்று வரமளித்தார்.

“வாமன்றேர் வல்ல வயப்போர் விசயனைப் போல்
தாமாருலகில் தவமுடையார் ‍-தாமார்க்குள்
காண்டற் கரியராய் காளத்தி யாள்வாரைத்

தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று ”

-----நக்கீரத் தேவர்
(பதினோராந் திருமுறை )



திண்ணன் வேட்டையாட நாணன் ,காடன் என்ற இரு வேடர்களுடன் சென்றான். வழியில் ஒரு பன்றியை கண்டு பின்னால் ஓடி அப்பன்றியைச் சுட்டுக் கொன்று பின்பு அதை சுட்டு சாப்பிட தண்ணீரைத் தேடி காளத்திமலைக்கு வந்தனர்.

அங்குள்ள மலைசாரலில் சென்று குடுமிதேவரைக் கும்பிடலாம் என்று வேடர் கூற திண்ணனும் சென்றான் .இங்கு வரும்போதெல்லாம் மனச்சுமை குறைந்து மகிழ்ச்சி உண்டாகிறதே என்கிறார்.பன்றியை தீ மூட்டி சுட்டுவை என்று காடனிடம் சொல்லி ,காண‌னுடன் மலையேறுகின்றான்
.
மலைமீது ஏறிச் செல்ல செல்ல நாயகனை நெருங்க‌ நெருங்க ஆனந்தம் பொங்குகிறது. இறைவன் குலத்தைப் பார்த்தானா? மனிதர்களாகிய நாம் தான் குலமென்றும் குணமென்றும் காண்கின்றோம்.

“கண்ணுக்கு குலமேது கண்ணா
கருணைக்கு நிறமேது
கொடுப்பவரெல்லாம் மேலாவார்
‍‍‍கையில் கொள்பவரெல்லாம் கீழாவார் ”

. என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?

.உயர் குலத்தை சேர்ந்த பிராமணனாயினும் சரி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த வேடுவனாயிருந்தாலும் சரி பக்தியெங்குணடோ அங்கு நான் தேடிவருவேன் என்கிறார்.
அவ்வப்போது இறைவன் இவற்றையெல்லாம் எடுத்துக் காண்பிப்பதுண்டு


இறைவன் சம்மந்த்ப்பட்ட அனைத்து நூல்களையும் வேதங்களையும் சாஸ்த்திரங்களையும் புராணங்களையும்
நாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது.வெறும் தர்க்கங்கள் தான் உண்டாகும். அதனால் நம் நேர விரயமும் வீண் விரோதமும் தான் வளரும். எல்லாவற்றிலும் மறைமுகமாக ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் அக்கால மக்களுக்கேற்ற வகையில் சிலவற்றை சொல்லியிருப்பார்கள்



நேற்று ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார். முருகருக்கு ஏன் இரண்டு மனைவிகள் என்று. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பொதுவாக பதில் சொல்வது கிடையாது.. இருந்தாலும் எப்போதோ சுகி சிவம் அவர்கள் சொனனது நினைவுக்கு வந்தது. இருப்பதிலேயே உயர்ந்த குலத்தை சேர்ந்த தெய்வானையையும் தாழ்ந்த குலத்தில் பிறந்த வள்ளியையும் மணந்து இருவரும் தனக்கு சமமென்று உலகிற்கு எடுத்து காட்டுவதற்காகவேதான். என்றார். இத்துடன் நின்று விடவேண்டும்

எம்பெருமானை கண்டான் திண்ணப்பன்
.கண்களில் நீர் சொரிய சிவபெருமானை
கட்டிப் பிடித்து உச்சி முகர்ந்து ஒன்றும் புரியாமல் உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டு சிலை போல் சிறிது நேரம் நின்றார்.
இங்கே ஒரு விஷயம்
எப்போதோ ஒரு ஹதீஸில் படித்தது நினைவிற்கு வருகிறது. ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒரு பெரியார் வந்து எந்த துஆ அல்லாவை சென்று சேர்கிற்து

அதற்கு நபிகள் " எந்த துஆ செய்யும் போது நம் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறதோ, எந்த து ஆ செய்யும் போது கண்களில் இருந்து நீர் வழிகிறதோ அந்த‌ துஆ அல்லாவை சென்று சேர்கிற்து

அதற்கு நபிகள் " எந்த துஆ செய்யும் போது நம் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறதோ, எந்த து ஆ செய்யும் போது கண்களில் இருந்து நீர் வழிகிறதோ அந்த‌ துஆக்கள் அல்லாவை சென்று சேர்கிறது .என் கிறார்."
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் " ..என்று இதைத் தான் வள்ளுவரும் சொல்கின்றார்.
மீண்டும் இங்கே வருவோம்

திண்ணன் அங்கே இறைவனுக்கு பூவாலும் இலையாலும் அலங்காரம் செய்விக்கப் பட்டு நீரால் அபிஷேகமும் செய்யப்பட்டு இருந்ததை கண்டு யார் இவ்வாறு செய்தது என வின‌வ, அதற்கு காணனோ ' நானும் உன் தந்தையும் ஒரு முறை இங்கே வந்த போது ஒரு பார்ப்பான் வந்து இவ்வாறு செய்ததை பார்த்திருக்கிறோம்.
அவர்தான் இன்றும் இப்படி செய்திருக்க வேண்டும் "என்றான். அதற்குள் திண்ணனுக்கும் நாமும் இனி இவ்வாறே செய்ய வேண்டும் என்ற ஆவல் வந்தது. பிறகு திடீரென்று "ஐயோ எம்பெருமான் தனிமையில் இருக்கிறாரே பசிக்குமே உணவுக்கு எங்கே போவார்". என்று அழுகின்றார்.

இறைவன் எங்கோ வானத்தில் நமக்கப்பாற்பட்டு தூரத்தில் இருப்பதாக நம்மில் சிலருக்கு நினைப்பு இருக்குமல்லவா?
ஒரு மீனானது நீருக்குள்ளேயே இருந்து கொண்டு நான் தண்ணீரை பார்க்க வேண்டுமே அது எங்கே என்று தேடுவது போலிருக்கிறது. இறைவன் எப்போது ந்ம்மோடே இருக்கிறான் இல்லையா ?
திண்ணனுக்குவெறும் சிலையாக வெறும் கல்லாக இருந்தால் அவனது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமா?

..........சந்திப்போம்

Thursday, January 14, 2010

... கவிதைகள்/பாடல்கள்

கல் மனதை கரைக்கும் கண்கள உந்தன் கண்கள்
கலியுகத்தை காக்கும் கண்கள் உந்தன் கண்கள் (கல் மனதை

நால்வருக்கு ஞானம் தந்து பாட வைத்த கண்கள்
கால் எடுத்து மீராவை ஆடவைத்த கண்கள் (கல் மனதை

தந்தையென வந்து நின்று அன்பு செய்த கண்கள்
சிந்தையினில் தேடுவோரை வம்பு செய்த கண்கள் (கல் மனதை

காணுமிந்த பூமி தனை ஆளவந்த கண்கள்
வேணுமென்ற போது வந்து ஆசி தந்த கண்கள் (கல் மனதை

Wednesday, January 13, 2010

உள்ளே செல்லும் முன்

அன்பு நெஞசங்களே! வணக்கம்.

இணைய தளத்தினுள் இப்படி ஒரு பதிவர் வட்டம் கூட்டமாக கும்மியடித்துக் கொண்டிருப்பது இது காறும் எனக்கு தெரியாமல் இருந்தது.உள்ளே சென்றதும் ஆச்சரியம் தாஙக‌முடியவில்லை.அடேயப்பா எத்தனை எத்தனை கவிஞர்கள், எத்தனை எத்தனை எழுத்தாளர்கள்,எத்தனை எத்தனை ஆன்மீகவாதிகள்,சோதிடர்கள் ,எத்தனை எத்தனை நாத்திகம் பேசும் அன்பர்கள்,சமையல் குறிப்புகளை அள்ளித் தரும் இல்லத்தரசிகள்.

உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? ஒன்றுமே புரியவில்லை தலை சுற்றியது தான் மிச்சம்.எனக்கோ பின்னூட்டம் கூட இடத் தெரியாது இப்போதுதான் கற்றுக் கொண்டேன். இதில் என் பஙகுக்கு எதையாவது தரலாமென்றால் எதைப் பற்றி எழுதுவது என்றே தெரியவில்லை. சோதிடம் பற்றி எழுதலாமென்றால்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ S.V சுப்பையா போன்ற ஜாம்பவான்கள் ஏற்கனவே உலா வருகிறார்கள். ஆன்மீகம் பற்றி ஏதாவது எழுதலாமென்றால் அதிலும் மதுரையம்பதி, குமரன் போன்றோர் எதிரே தென்படுகிறார்கள். கவிதையோ சொல்லவே வேண்டாம். இவை மூன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது.

சில பதிவுகளைப் பார்த்ததும் நாம் ஏதும் எழுத் வேண்டாம் எல்லாவற்றையும் படித்து ரசித்துக் கொண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆயினும் உள்ளிருந்து ஏதோவொன்று தூண்டிக் கொண்டிருப்பதால் ஆன்மிகத்தில் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அது சிறிதளவேனும் ,சிலருக்கேனும் பயனுள்ளதாக இருந்தால் அதுவே போதுமல்லவா ?

நாகரிகம் என்பது ஒரு நகரத்தை சுற்றி ஏற்படுகிறது. ந‌கரமோ ஒரு நகரைச் சுற்றி உண்டாவது.

நகர் என்றால் கோவில் என்று எப்போதோ கி வா அவர்கள் எழுதியதாக படித்த ஞாபகம்.

அப்படி எனது இல்லத்தைச் சுற்றி ஒரே கோவிலாக அமைந்திருக்கும். வடக்கே எல்லையம்மன் கோவிலும் திருவேட்டீஸ்வரன் கோவிலும்,

கிழக்கே பார்ததசாரதி கோவிலும், கோலமணி அம்மன் கோவிலும், தெற்கே தீர்த்த கபாலீஸ்வரர் கோவிலும், துலுக்கானந்தம்மன் கோவிலும் இவை தவிர நாற்புறமும் மசூதிகளும் முன்னும் பின்னும் கிறித்துவ தேவாலயமும் இருக்கின்றது. எத்தனையோ புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன் என் இல்லமே ஒரு கோவிலாகத்தான் இருக்கும் . திருவல்லிக்கேணியில் பிறந்து வளர்ந்து இறைச் சூழலிலேயே இருப்பதனாலோ என்னவோ இறைவனைப் பற்றியும் பக்தியைப் பற்றியும் எழுதத் தோன்றுகிறது. ====

…………….சந்திப்போம்